அண்ணாமலைப் பல்கலை.யில் இருந்து பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தகுதியானவர்களே: ஆசிரியர் சங்கம்

அண்ணாமலைப் பல்கலை.யில் இருந்து பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தகுதியானவர்களே: ஆசிரியர் சங்கம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கல்லூரிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் தகுதியானவர்கள்தான் என அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சங்கத் தலைவர் ஆர்.உதயசந்திரன் தெரிவித்துள்ளது: தமிழக அரசு இந்தப் பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பொருட்டு, நிதி நெருக்கடியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்திலிருந்து 369 ஆசிரியர்களை அரசுக் கல்லூரிகளுக்கு பணி நிரவல் செய்தது. 
 ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த காலக்கட்டத்தில் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயம் செய்த தகுதியின் அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். மேலும் 279 பேராசியர்கள் பி.ஹெச்.டி.யும், 71 பேராசிரியர்கள் எம்ஃபில் ஆய்வு பட்டமும் பெற்றுள்ளனர். 
 பணி நிரவல் செய்யப்பட்ட பேராசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவோர் அல்ல. இவர்களில் பலர் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், சிலர் 16 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்கள். பல்கலைக்கழக பேராசிரியர்கள் அனைவரும் உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் என்பதை அரசு பரிசோதித்த பிறகே பணி நிரவல் ஆணையைப் பிறப்பித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் சகோரத உணர்வோடு பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என ஆர்.உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment