செஞ்சி: அரசு விடுதியில், 9ம் வகுப்பு மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக, விடுதி வார்டன் உட்பட நான்கு பேர்,சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், அருளவாடி கிராமத்தை சேர்ந்த அல்லிமுத்து மகள் வினிதா, 14; அன்னியூரில் உள்ள அரசு விடுதியில் தங்கி, 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 8ம் தேதி காலை, விடுதி அறையில் வினிதா துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
பள்ளி ஆசிரியை அடித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால், என் மகள் தற்கொலை செய்து கொண்டார்;விடுதி வார்டன் மற்றும் ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர் என, வினிதாவின் தந்தை அல்லிமுத்து, போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, தற்கொலை என பதிவு செய்த வழக்கை,தற்கொலைக்கு துாண்டியது என்ற பிரிவில் போலீசார் மாற்றம் செய்தனர்.
உறவினர்கள் மறியல்: இந்நிலையில் நேற்று, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த,வினிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், வழக்கை எஸ்.சி., - எஸ்.டி., பிரிவின் கீழ் மாற்றம் செய்ய வேண்டும்; இழப்பீடாக, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதியம், 1:00 மணிக்கு மருத்துவமனை எதிரே மறியல் செய்ய முயன்றனர். அதிகாரிகள் பேசியதை அடுத்து, 3:30 மணிக்கு,மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதிகாரிகள் விசாரணை: விடுதி வார்டன் விஜயலட்சுமி, சமையலர்கள் அம்மாச்சி, மகாலட்சுமி, இரவு காப்பாளர் சுமதி ஆகியோரை, தற்காலிக பணி நீக்கம் செய்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அனந்தராமன் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியை மீதான புகார் குறித்து, கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment